நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது. குறிப்பாக உள்ளூர் மக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் நகராட்சி தினசரி சந்தைக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் சாலை ஓரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல மக்களின் பயன்பாட்டிற்காக உதகை நகராட்சி நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வணிக நிறுவனங்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்களை நடைபாதைகள் மீது நிறுத்துவதால் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல் சாலை ஓரங்களில் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன.
இதனால் எட்டின்ஸ் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.